நுரையீரல் பிரச்சினைகளுக்குத் தீர்வு இலைக் காய்கறிகளைச் சாப்பிடுவதே! புதிய ஆய்வு முடிவு!

இலைக் காய்கறிகளான முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை உட்கொண்டால் நுரையீரல் பிரச்சினைகள் தீரும் எனச் சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. நேச்சுரல் என்னும் இதழில் வெளிவந்துள்ள இது பற்றய ஆய்வுக் கட்டுரையில், இலைக் காய்கறிகள் நார்ச்சத்து மிக்க உணவுகள் மட்டுமல்ல; அவை நுரையீரல் தொற்றுகளை எதிர்த்துப் போராடக் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை இலைக் காய்கறிகளில் உள்ள சில கலவைகள், குடல் மற்றும் நுரையீரல் போன்ற உடலிலுள்ள முக்கியமானப் புள்ளிகளைப் பாதுகாக்கும் ரகசியமாக எவ்வாறு செயல்படுகின்றன என்பதை லண்டனிலுள்ள பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இவை நமது நுரையீரலின் ரத்த நாளங்களில் காணப்படும் ஆரில் ஹைட்ரோகார்பன் ரிசப்டார் என்ற புரதத்திற்கு அறிவுறுத்தல்களை அனுப்பி நுரையீரல் பகுதியில் ஆரோக்கியமான சூழலை உறுதி செய்கின்றன எனவும் உள்ளுறுப்புகளில் கழிவுகள் சேராத வகையில் இவை உதவுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
குருசிபெரஸ் அல்லது சிலுவைக் காய்கறிகள் எனப்படும் முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்தவற்றில் ஆண்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நுரையீரலில் உள்ள நச்சுகளை அகற்றும் என்றும் புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜென் என்ற காரணியை அழித்துச் செல்களைப் பாதுகாக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பச்சை நிறக் காய்கறிகளில் கரோட்டினாய்ட்கள் அதிகம் இருப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறையும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே பருவகாலக் கீரைகளைத் தினசரி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அவற்றிலுள்ள ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்துக்களும் செரிமானம் சீராக நடைபெற உதவுமென்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நுரையீரலில் தேங்கியிருக்கும் நிகோடின் நச்சுகளை அகற்றிச் சுத்தம் செய்ய ப்ராக்கோலி மிகவும் உதவும் என்றும் அதில் உள்ள சல்பரோபேன் என்னும் மூலப்பொருள் நுரையீரலில் உள்ள காயங்களை விரைவில் ஆற்ற உதவும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உடலில் ஆக்ஸிஜனை கடத்திச் செல்ல உதவுவது விட்டமின் சி. நுரையீரலின் சீரான இயக்கத்திற்கு மிக முக்கியமான உயிர்ச்சத்து இதுதான். பசலைக்கீரையில் உள்ள விட்டமின் சி மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை நுரையீரல் மட்டுமின்றி சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுமாம்.
நுரையீரல் பாதிப்பால் உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நுரையீரல் பாதிக்காமல் இருக்க மனிதன் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய காய்கறிகள் குறித்த ஆய்வை கார்ட்டின் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனை ஆய்வுக்கூடத்தில் வைத்து ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் அவர்கள் பீன்சை 75 முதல் 100 கிராம் வரை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் 90 சதவீதம் வரை குறையும் என்று கண்டுபிடித்துள்ளார்கள். உணவில் ஆரஞ்சு சிவப்பு மற்றும் மஞ்சள் நிற காய்கறிகளான கேரட், பரங்கிக்காய், தக்காளி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பூசணிக்காய், தடியங்காய் போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் அவற்றிலுள்ள காட்டினாய் பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் ஏ போன்றவை நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் என்று அவர்கள் கூறுகின்றார்கள். நுரையீரல் புற்றுநோயே இந்தியா மற்றும் உலக நாடுகளில் நிகழும் புற்றுநோய் மரணங்களுக்கு மிக முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகையைச் சேர்ந்த இஞ்சியும் மிக முக்கியமான ஆன்டிஆக்சிடென்ட். இது நுரையீரலில் படிந்திருக்கும் கழிவுகளை அகற்றி அதன் வீக்கத்தைக் குறைக்கும் என்றும் நுரையீரலில் மியூக்கஸ் எனும் திரவத்தைக் குறைக்கும் சக்தி இஞ்சியில் இருப்பதால் ஆஸ்துமா போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது என்றும் அவர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே தினமும் அருந்தும் தேநீர் மற்றும் பழச்சாற்றில் இஞ்சியை சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. இஞ்சியைப் போன்றே பூண்டும் நுரையீரலுக்கு நன்மை அளிக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதில் உள்ள அலிசின் என்னும் இயற்கையான ஆன்டிபயாடிக் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றிலிருந்து நுரையீரலைப் பாதுகாக்கிறது. தினமும் உணவில் சிறிது பூண்டைச் சேர்த்து வந்தால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 44 சதவீதம் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இதுபோன்றே வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதும் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும் என்று கூறப்படுகின்றது.
நமது வெளிப்புற உறுப்புகளின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது போல் உள்ளுறுப்புகளையும் கவனித்துக் கொள்வது அவசியம். குறிப்பாக மூச்சுக்கு ஆதாரமாய் விளங்கும் நுரையீரலைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் மிக மிக அவசியம். நீர் அருந்தாமல் கூட நாம் ஓரிரு நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால் சுவாசிக்காமல் சில நிமிடங்கள் கூட நம்மால் உயிர் வாழ முடியாது. சுவாசத்துக்கு அஸ்திவாரமாய் விளங்கும் நுரையீரல் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் உணர வேண்டும். அது பாதிப்படைந்தால் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். இயன்ற வரை அதற்குத் தீங்கு விளைவிக்காத வகையில் நமது உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தல் நலம். குறிப்பாக, நாம் அன்றாட வாழ்வில் எடுத்துக்கொள்ளும் உணவில் பச்சை இலைக் காய்கறிகளைச் சேர்த்துக் கொண்டால் நுரையீரல் பாதிப்புகள் எதுவும் வராது என்பதே மேற்கண்ட ஆய்வுகள் சொல்லும் உண்மை.