செவ்வாய் கிரகத்தில் ஓடிய ஆறுகளுக்கு என்ன நடந்தது?

செய்தி சுருக்கம்:
செவ்வாய் கிரகத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட ஆறுகள் ஓடிக்கொண்டிருந்ததாகவும், சனி கிரகத்தின் துணைகோள்களுள் ஒன்றான டைட்டானில் இப்போதும் மீத்தேன் ஆறுகள் ஓடுவதாகவும் புதிய தொழில்நுட்பம் மூலம் அமெரிக்க நிலவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
நாசா அனுப்பிய காஸினி என்ற விண்கலம் சனி கிரகத்தின் துணைகோளான டைட்டானிலுள்ள ஆறுகளை படம் எடுத்து அனுப்பியது. இந்தப் படங்களைப் பார்த்த பின்னர் விஞ்ஞான குழுவினருக்கு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆர்வம் தோன்றியது.
வேற்று கிரகங்களிலுள்ள ஆறுகளைப் பற்றிய ஆராய்வதற்காக பூமியில் ஓடும் ஆறுகளின் அகலம், ஆழம், சாய்மானம், நீர் பாயும் விகிதம், ஆற்றின்மேல் செயல்படும் கோளின் ஈர்ப்புவிசை, ஆற்றுப்படுகையிலுள்ள வண்டலின் அளவு மற்றும் அடர்த்தி ஆகியவற்றை சார்ந்து ஆய்வுக்குழுவினர் சமன்பாடுகளை வகுத்தனர்.
பின்னணி:
செவ்வாய் கிரகத்தை முதன்முதலில் 1610ம் ஆண்டு கலிலியோ டெலஸ்கோப் என்னும் வானியல் நோக்கி மூலம் கண்டுபிடித்தார். செவ்வாய், சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்தபடியாக நான்காவதாக உள்ளது. இது அளவில் பூமியை விட சிறியது. செவ்வாய் கிரகம் 6,791 கி.மீ. விட்டம் கொண்டது. செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் 5.46 கோடி கி.மீ. தூரத்தில் எப்போதாவது வரும். சராசரியாக இரு கிரகங்களும் இடைய உள்ள தொலைவு 22.5 கோடி கி.மீ. ஆகும்.
செவ்வாய் கிரகத்திற்கு முதன்முதலாக அனுப்பப்பட்ட விண்கலம் மெரைனர் 4 என்பதாகும் 1965ம் ஆண்டு இது அனுப்பப்பட்டது. அதன் பிறகு பல விண்கலங்கள் செவ்வாயின் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்டுள்ளன. செவ்வாயில் இறங்கியுள்ளன. நம்முடைய பூமியைக் காட்டிலும் பெருமளவு வேறுபாடு கொண்ட செவ்வாயைப் பற்றி பல்வேறு தகவல்களை அவை அனுப்பியுள்ளன.
செவ்வாய் கிரகத்தில் காற்றுமண்டலம் மிகவும் மெல்லியதாக உள்ளது. அங்கு மனிதர்கள் சுவாசிக்க போதுமான காற்று இல்லை. அங்கு நிலவும் குளிரும் மனிதர் வசிக்க ஏற்றது அல்ல. ஆனால் டெலஸ்கோப் என்னும் வானியல் நோக்கி, விண்கலங்கள் மற்றும் ரோவர்கள் மூலம் கிடைக்கும் படங்களில் செவ்வாயில் நீர் இருந்தமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. செவ்வாயின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களில் உலர்பனிப்படிவுகள் உள்ளன.
நெடுங்காலத்திற்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் எவ்வளவு வேகமாக ஓடியிருக்கும், எவ்வளவு ஆழம் கொண்டவையாக இருந்திருக்கும் என்று ஆய்வு குழுவினர் தற்போது ஆராய்ச்சி செய்து வருகின்றனர். பல்வேறு சுற்றுப்பாதையிலிருந்து செயற்கை கோள்கள் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் படங்களைக் கொண்டு இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் கேல் என்ற பள்ளத்தாக்கு உள்ளது. ஏறக்குறைய 350 முதல் 380 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் விண்கல் ஒன்று செவ்வாய் கிரகத்தின்மேல் மோதியதால் இந்தப் பள்ளம் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கேல் பள்ளத்தாக்கில் குறைந்து 1 லட்சம் ஆண்டுகள் ஆறுகள் பாய்ந்திருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஜெஸ்ரோ என்ற பள்ளமும் செவ்வாயில் உள்ளது. இது ஏறத்தாழ 45 கி.மீ. விட்டம் கொண்டது. இப்பள்ளத்தில் குறைந்தது 10 லட்சம் ஆண்டு காலத்திற்கு ஆறு பாய்ந்திருக்கலாம் என்றும் கணிக்கிறார்கள். செவ்வாய் கிரகத்திலுள்ள ஏரிகள் நிரம்பி வழிந்திருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
பூமியில் எங்கு பார்த்தாலும் ஏதோ ஒருவிதத்தில் நீர் காணப்படுகிறது. கொதிநிலையிலோ, உறை நிலையிலோ, குளிர்ந்த தடாகமாவோ, குடிநீராகவோ நீரை பார்த்துக்கொண்டே இருக்கிறோம். செவ்வாயிலும் நீர் இருந்ததென்றால் அங்கு உயிரினங்கள் வாழ்ந்தனவா என்கின்ற கேள்வியே இந்த ஆர்வத்தை தூண்டுகிறது. ஒருவேளை செவ்வாயில் இன்னும் நீர் இருக்குமென்றால், மேற்பரப்பில் இல்லாமல் நிலத்திற்குள் இருக்குமென்றாலும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் அங்கு இருக்குமா என்ற ஆர்வமே ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வைக்கிறது.
சனி கிரகம்
சனி என்ற கோள், சூரிய குடும்பத்திலுள்ள கோள்களுள் அழகிய தோற்றம் கொண்டதாகும். இதைச் சுற்றி வளையங்கள் போன்ற தோற்றம் காணப்படுகிறது. சூரிய குடும்பத்தில் இது ஆறாவது கோள். உருவத்தில் இது இரண்டாவது பெரியதாகும். சூரியனிலிருந்து ஏறக்குறைய 140 கோடி கி.மீ. தூரத்தில் உள்ளது. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகிய வாயுக்கள் இதில் பெருமளவு உள்ளன.
சனி கிரகத்தின் துணை கோள்கள், அதாவது நிலவுகளில் ஒன்று டைட்டான் ஆகும். சனியின் நிலவுகளில் இதுவே பெரியது. சூரிய குடும்பத்திலுள்ள நிலவுகளில் வியாழனின் நிலவான கனிமேட் மட்டுமே இதைவிட அளவில் பெரிதாகும். இந்த டைட்டான், சூரிய குடும்பத்தின் முதல் கோளான புதனை காட்டிலும் அளவில் பெரியது.
டைட்டான் என்னும் நிலவில் இப்போதும் மீத்தேன் ஆறுகள் ஓடுகின்றன. மீத்தேன் என்பது காற்றைக் காட்டிலும் இலேசான வாயு ஆகும். தண்ணீரில் சிறிதளவு கரையக்கூடியது. காற்றில் உடனடியாக எரியக்கூடியது. காற்றுடன் எரிந்து கார்பன்டைஆக்ஸைடையும் நீர்த்துளிகளையும் கொடுக்கும். திரவவடிவ மீத்தேன் டைட்டானில் ஓடக்கூடும்.
டைட்டானின் வாயு மண்டலத்தில் அதிக அளவு நைட்ரஜன் உள்ளது. காற்று அழுத்தம் பூமியைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகமாக காணப்படுகிறது. மேகங்கள், மழை, ஆறுகள், ஏறிகள் மீத்தேன் மற்றும் ஈத்தேன் ஆகிய திரவ ஹைட்ரோகார்பன்கள் நிறைந்த கடல்களும் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பூமியிலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், அடர்த்தியான காற்று மண்டலத்தை கொண்டிருந்தாலும் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் உருவாக்கிய சமன்பாட்டினை டைட்டானிலுள்ள ஆறுகளுக்கும் பொருத்தி பார்த்துள்ளனர்.
டைட்டானில் வட அமெரிக்காவிலுள்ள ஒண்டாரியோ ஏரிக்கு சமமான அளவிலான மீத்தேன் ஏரி இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒண்டாரியோ ஏரியின் பரப்பளவு 18,960 ச.கி.மீ. ஆகும்.
வழக்கமாக ஆறுகள் காற்றாடி போன்ற வடிவில் டெல்டா கொண்டவையாக இருக்கும். ஆறுகளின் வண்டல்களால் இந்த டெல்டா உருவாகும். டைட்டானிலுள்ள ஆறுகளுக்கு டெல்டா உருவாகாத காரணத்தால் அவை வண்டல்களை கொண்டு செல்லுமளவுக்கு அதிக வீச்சாக பாயவில்லை என்று கருதப்படுகிறது.