Fukishima அணுமின் நிலைய கழிவுநீரை கடலில் கலக்கும் ஜப்பான் – இது மனித குலத்திற்கு எதிரான மாபெரும் குற்றம் என உலகநாடுகள் கண்டனம்.


செய்தி சுருக்கம்:
கடந்த வியாழனன்று (24-08-2023) KCNA செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அழிந்துபோன Fukushima அணுமின் நிலையத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் கதிரியக்க அபாயம் கொண்ட கழிவுநீரை பசிபிக் கடலில் கலப்பதை உடனடியாக ஜப்பானிய அரசு கைவிட வேண்டும் என்று வடகொரிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. Fukushima Daiichi அணுமின் நிலையத்தில் உள்ள கிடங்குகளில் கதிரியக்க விளைவு கொண்ட கழிவுநீர் தொட்டிகளும் பாதிப்படைந்த நியூக்ளியர் ரியாக்டர்களும் அப்படியே உள்ளன. இந்நிலையில் இந்த கழிவுநீரை கடலில் கலக்க ஜப்பான் எடுத்துள்ள முடிவை பல்வேறு நாடுகள் எதிர்த்து வருகின்றன. Pyongyang நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதைப்பற்றி கூறும்போது “ஜப்பான் நாட்டின் இந்த செயலானது நிச்சயமாக உலகத்திற்கு அச்சுறுத்தலை உருவாக்கும் ஒன்றாகும், இது உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் மனித குலத்தின் எதிர்காலத்திற்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்” என்கின்றனர்.
வடகொரியா இதைப்பற்றி கூறும்போது “ஜப்பான் உலக மக்களுக்கு எதிரான மன்னிக்க முடியாத குற்றத்தை செய்வதற்கு துணிந்து விட்டது” என்று குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் அனைத்திற்கும் ஜப்பான் மட்டுமே பொறுப்பாகும் என்றும் காட்டமாக கூறியுள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
2011 ஆம் ஆண்டில் நிகழ்ந்த விபத்தில் அழிந்துபோன Fukushima Daiichi அணுமின் நிலையத்தில் தேக்கி வைக்க பட்டுள்ள கதிரியக்கம் கொண்ட கழிவுநீர் தேவையான பரிசோதனைகளுக்கு பின்னர் பாதிப்புகள் ஏதுமில்லை என்று உறுதியான பின்பு அதனை பசிபிக் கடலில் கொட்டிவிட இருப்பதாக நேற்று ஜப்பான் செய்தி வெளியிட்ட பின்னர் உலக நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த அழிந்துபோன அணுமின் நிலையத்தில் கதிரியக்கம் நிறைந்த கழிவுநீர் மொத்தமாக 1.3 மில்லியன் மெட்ரிக் டன்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாக இதற்கு முன் வெளியிட்டிருந்த அரசு அறிவிப்பில் அந்நாட்டு பிரதமர் Fumio Kishida கூறியிருந்தார். இத்தனை அளவு கதிரியக்க கழிவுநீர் கடலில் கலப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பது மற்ற நாடுகளின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக Tokyo அரசு இந்த கழிவுநீர் அகற்றம் என்பது International Atomic Energy Agency (IAEA) ஆல் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே செயல்பாட்டிற்கு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவை சேர்ந்த அணுக்கதிர் வீச்சின் அளவை கண்காணிக்கும் நிறுவனத்தின் சோதனை முடிவுகளும் ஜப்பான் அரசு கழிவுநீரை கடலில் கலப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாகவே வந்துள்ளது. அந்த நிறுவனம் Fukushima பகுதிகளில் பல்வேறு மாதிரிகளை எடுத்து மேற்கொண்ட சோதனைகளில் அங்குள்ள கழிவுநீரில் tritium எனப்படும் கதிரியக்க அளவீடு மிகவும் குறைவான அளவே கலந்துள்ளது என தெரிய வந்தது. இந்த அளவு கதிரியக்கம் மனிதர்களுக்கு அல்லது சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளனர்.
அந்த ஆய்வு முடிவுகளை நேற்று Tokyo Electric Power (TEPCO) நிறுவனம் அதன் வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது, இந்த நிறுவனத்தின் மூலமாக தான் Fukushima அணுமின் நிலையம் இயக்கப்பட்டு வந்தது, இவர்கள் கூற்றுப்படி கதிர்வீச்சு அளவை அளக்கும் அளவீடு becquerels என்பது இங்குள்ள கழிவுநீரில் ஒரு லிட்டருக்கு 63 புள்ளிகள் என்ற அளவில் தான் உலல்து, இது WHO அமைப்பு அனுமதித்துள்ள ஒரு லிட்டருக்கு 10000 becquerels என்பதை விட மிகவும் குறைவான அளவே ஆகும், எனவே இந்த நீரை கடலில் கலப்பதால் பாதிப்பு எதுவுமில்லை என்று அவர்கள் வாதிட்டனர்.
என்னதான் இருந்தாலும் இந்த கதிரியக்க அபாயம் கொண்ட கழிவுநீரினை கடலில் கலப்பதை ஜப்பானின் அண்டைய நாடுகள் கூட விமர்சனம் செய்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இதனால் உருவாகும் பாதுகாப்பு அச்சுறுத்தலால் பலர் இதை ஏற்றுகொள்ள மறுக்கின்றனர். சீனா அரசு ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யும் அனைத்து விதமான கடல் உணவுகளுக்கும் தடை விதித்து தன்னுடைய எதிர்ப்பை காட்டியுள்ளது. பீஜிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஜப்பானின் Tokyo நிர்வாகம் இந்த கழிவுநீர் எந்தவித கதிரியக்க பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்று எந்த வகையிலும் உறுதி செய்யாமலேயே இதனை கடலில் கலக்க முடிவெடுத்து விட்டதாக புகார் கூறியுள்ளது.
பின்னணி:
ஜப்பானின் அணுமின் நிலைய கழிவுநீரை கடலில் கலப்பதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல நாடுகளின் பசுமை அமைப்புகளும், பல அரசாங்கங்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றன. கடந்த வாரத்தில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் இந்த சம்பவத்திற்கு எதிராக கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். ஜப்பானின் இந்த முடிவானது உலக நலனின் மீது அக்கறை இல்லாத எதேச்சதிகாரம் நிறைந்த செயலாகும், ஜப்பானின் தற்போதைய அரசாங்கம் அங்கு வாழும் மக்கள் மட்டுமல்லாது உலக மக்கள் அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி விட முடிவு செய்துள்ளது. அந்நாட்டின் சுய லாபத்திற்காக உலக உயிர்களை பலியிட தயாராகி விட்டது என்றும் கடுமையாக தாக்கி அறிக்கை வெளியிட்டிருந்தது.
நேற்று சீனாவின் சிறப்பு அதிகார முனையங்களான Hong Kong மற்றும் Macau ஆகியவை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜப்பானின் குறிப்பிட்ட 10 மாகாணங்களில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய அனைத்து விதமான கடல் உணவுகளையும் தடை செய்து உத்தரவிட்டிருந்தது. இதேபோல தென்கொரியாவும் ஜப்பானிலிருந்து இறக்குமதியாகும் கடல் உணவுகளை ஏற்கனவே தடை செய்துவிட்டது. மேலும் தங்கள் நாட்டின் நலன்மீது அக்கறை கொண்டுள்ளதால் ஜப்பானின் கடல் உணவுகள் அனைத்திற்கும் தடை விதித்துள்ளோம் என்று கூறியுள்ளது.
உலக பசுமை ஆர்வலர்கள் அனைவரும் ஜப்பானை எதிர்த்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பசிபிக் கடலை தெரிந்தே மாசு படுத்தும் முயற்சியில் இறங்கியது ஜப்பான் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த கதிரியக்கம் நிறைந்த கழிவுநீரை அப்படியே பாதுகாப்பாக சேகரித்து வைத்து வேறு ஏதேனும் பாதிப்பில்லா வழியில் பயன்படுத்த முடியுமா என்றும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.