அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிக் கலாச்சாரம்: அதிர்ச்சி ரிப்போர்ட்

அமெரிக்காவில் இனவெறியோடு துப்பாக்கிக் கலாச்சாரமும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இது அமெரிக்காவுக்குப் புதிதல்ல என்றாலும் தற்போதைய துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் வேகம் அந்நாட்டை அதிர்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மீண்டும் மீண்டும் நடக்கும் இத்தாக்குதல்களால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகின் மற்ற நாடுகளுக்கு மனித உரிமைகள் பற்றிய பாடம் எடுக்கும் அமெரிக்கா, தனது நாட்டில் நடக்கும் இந்த மனித உரிமை மீறல்களைத் தடுக்க முடியாமல் தவிக்கிறது என்றே சொல்ல வேண்டும். அங்கே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணமிருக்கின்றன. துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகளில் வருடந்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கிறார்கள் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க நாடுகளில் நம்மூரின் அரிவாள், கத்தி போல துப்பாக்கிகளை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் உடைகளை வாங்குவது போல அமெரிக்காவில் துப்பாக்கிகளை மிகச் சாதாரணமாக வாங்கிவிடலாம். 1891ஆம் ஆண்டில் அமெரிக்க அரசியல் இரண்டாவது திருத்தம் நடைமுறைக்கு வந்தபோது அமெரிக்க குடிமக்களுக்கு ஆயுதம் தாங்கும் உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் துப்பாக்கி வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. விளைவு, மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இருபத்தெட்டு படுகொலைகள் அதாவது ஆறு மாதங்களில் 140 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர். இது 2022இல் நடந்த படுகொலையின் எண்ணிக்கையை விட அதிகமானது. 2020ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த கொலைகளில் 79% துப்பாக்கிகளால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கிறது. தற்கொலைகளும் இவற்றில் அடங்கும். அதாவது அந்த ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 136 பேர் துப்பாக்கியால் இறந்துள்ளனர். 2001ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் சான் ஜோஸ் மற்றும் கொலராடோ போல்டர் பகுதிகளில் நிகழ்ந்த கடுமையான துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் போல்டரில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய நபரும் தற்கொலை செய்திருக்கிறார். இது 1990 களை ஒப்பிடும்போது மிகப்பெரிய எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 58 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை அங்கு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலேயே மிகவும் மோசமானது என்று இது கூறப்படுகிறது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மற்ற நாடுகளுக்கு நிதி உதவி செய்யும் அமெரிக்காவின் சொந்த மக்களில் 59 சதவீதத்தினர் அதன் ஜனநாயக அமைப்பில் திருப்தி அடையவில்லை எனும் தகவலைப் பார்க்கும்போது அமெரிக்கா தனது ‘பெரியண்ணன்’ பஞ்சாயத்தைத் துறந்து தனது நாட்டின் மீது கவனம் செலுத்துவது நல்லது என்று தோன்றுகிறது.
உலக மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதத்தை மட்டுமே பெற்றிருக்கும் அமெரிக்கர்கள் உலகின் பாதி துப்பாக்கிகளைத் தங்கள் கைவசம் வைத்திருக்கிறார்கள். அதாவது பத்து அமெரிக்கர்களில் மூவர் துப்பாக்கி வைத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 1500 க்கும் அதிகமான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு துப்பாக்கிச் சூடு என்ற அளவில் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஜெர்மனி, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் துப்பாக்கிச் சூட்டினால் நடக்கும் உயிர்க்கொலைகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிக உயிரிழப்புகள் நடப்பது அமெரிக்காவில்தான். அதே வேளை, துப்பாக்கி மீதான கட்டுப்பாடுகள் உள்ள பிரதேசங்களில் கொலைகள் குறைவாக நடப்பதையும் பார்க்கமுடிகின்றது. பின் ஏன் அமெரிக்கா இந்தத் துப்பாக்கிப் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்யவில்லை? அதற்கு வரலாற்றை நாம் சற்றே திரும்பிப் பார்க்க வேண்டும்.
அமெரிக்காவை நிர்மாணித்த பெரும் தலைவர்கள் ஒருகாலத்தில் மன்னராட்சியின் கீழ் இருந்தவர்கள். மதவாதிகள் எப்படி மன்னர்களைக் கட்டுப்படுத்தியிருந்தார்கள் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். ஆகவே தாங்கள் உருவாக்கும் இந்தப் புதிய அரசு ஒருபோதும் மதத்துக்குக் கட்டுப்பட்டதாக இருக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்திருக்கிறார்கள்.
அதனடிப்படையில் தனித்தியங்கும் ராணுவக் குழுக்கள் சமூகப் பாதுகாப்புக்கு அவசியம் எனக் கருதி அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியிருக்கிறார்கள். அந்த அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் சார்ந்த சீர்திருத்தங்களில் இரண்டாவது இடத்தில் இருந்ததுதான் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் இந்த உரிமை. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்படுத்தப்பட்ட இந்த அடிப்படை உரிமை இன்று வரையில் மாறாமல் அவர்களின் ரத்தத்தில் ஊறியதாக மாறிவிட்டது.
ராணுவத்தினருக்குத் தேவைதான், ஆனால் பொதுமக்களுக்கு இந்தக் கனரக ஆயுதங்கள் தேவையா என்று யாரும் யோசிக்கவில்லை. அடிப்படை உரிமை என்பதால் யார் வேண்டுமானாலும் துப்பாக்கியை வாங்கிக் கொள்ளலாம். பல மாகாணங்களில் வால்மார்ட் போன்ற வர்த்தகத் தளங்களில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை எளிதில் வாங்கிக் கொள்ளலாம்.
இன்னும் ஒரு சுவாரசியம் என்னவென்றால் அமெரிக்காவில் தேசியத் துப்பாக்கிச் சங்கம் (NRA) என்று துப்பாக்கி உரிமைக்காகக் குரல் எழுப்பும் பண பலம் மிகுந்த நிறுவனம் ஒன்று உள்ளது. இதில் ஐம்பது லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் மட்டும் 1.67 கோடி கைத்துப்பாக்கிகள் உட்பட சுமார் நான்கு கோடி துப்பாக்கிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சங்கம் தங்களது உரிமைகளுக்கும் கொள்கைகளுக்கும் சாதகமாக இருக்கும் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களது தேர்தல் பணிக்கு நிதி அளிக்கிறது எனவும் அதிபர் தேர்தலில் இந்த நிறுவனம் யாரை ஆதரிக்கிறது என்பது கூர்ந்து கவனிக்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் ஹிலாரி கிளின்டன் துப்பாக்கிக் கட்டுப்பாடுகளை ஆதரித்ததால் அவருக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பு நிலைகளை இந்தச் சங்கம் எடுத்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது என யோசிக்கிறீர்களா?
இன்னும் ஒன்று சொல்லவா? துப்பாக்கி உரிமையில் கைவைக்க யாருக்கும் உரிமை இல்லை என்று கொடிபிடிக்கும் அமெரிக்க மக்கள் சொல்வதென்ன தெரியுமா? துப்பாக்கி யாரையும் கொல்வதில்லை.மனிதனே மனிதனைக் கொல்கிறான். வீடுகளில் நடக்கும் கொள்ளைச் சம்பவங்களில் தங்களைக் காப்பது இந்தத் துப்பாக்கிகள்தான் என்று துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைக்கு ஆதரவாக அவர்கள் குரல் எழுப்புகிறார்கள்.
‘சம்பவம் துயரமளிக்கிறது’ என்ற ஒற்றை ட்வீட்டோடு முடித்துக் கொள்கிறார்கள் அமெரிக்க அதிபர்கள். இது உயிர் சம்பந்தப்பட்டது என்பதையும் மனித உயிர் விலை மதிக்க முடியாதது என்பதையும் அமெரிக்கா உணர வேண்டும். உறுதியான மற்றும் கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவதன் மூலமே இந்தக் கொடூரமானக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.