Elegant Meaning in Tamil

ஓர் ஓவியத்தைப் பார்க்கிறோம், அதில் ஒவ்வொரு கோடும், ஒவ்வொரு வண்ணமும், ஒளியும் அத்தனைத் துல்லியமாக அழகாக வந்திருக்கிறது, ‘அட, பிரமாதம்’ என்று நம்மையும் மறந்து பாராட்டுகிறோம்.
ஓவியத்துக்குமட்டுமில்லை, நடனம், உணவு, கிரிக்கெட், கால்பந்து, கதை, கவிதை என்று எல்லா விஷயங்களிலும் இப்படிச் “சிறப்பாகச் செய்வது” உண்டு. அதற்கு மாறாக “மோசமாகச் செய்வது”ம் உண்டு. நாம் சிறப்பாகச் செய்யப்படுகிற விஷயங்களை எந்த அளவு ரசிக்கிறோமோ அந்த அளவுக்கு மோசமாகச் செய்யப்படுகிறவற்றை விரும்புவதில்லை. நாம் எதைச் செய்தாலும் அந்தச் சிறப்பான வகையில் இடம்பெறவேண்டும் என்று விரும்புகிறோம்.
ஆங்கிலத்தில் இதை எலகன்ட் என்று அழைக்கிறார்கள். ‘எலகன்ட் பெயின்டிங்’, ‘எலகன்ட் ரைட்டிங்’ என்று பல இடங்களில் நாம் இந்தச் சொல்லைக் கேட்கிறோம். இதற்குத் தமிழில் என்ன பொருள்? இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
எலகன்ஸ்
Elegance என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பலவிதமான பொருட்களைச் சொல்கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்புள்ளவைதான்: அழகாக இருத்தல், நளினமாக இருத்தல், சிறப்பாகத் தோன்றுதல், ஒரு குறிப்பிட்ட பாணியை வெளிப்படுத்துதல், இதமானது, ரசனையானது, மேம்பட்டது, தனித்துவமானது, அழகானது, ஈர்ப்பது, ஆடம்பரமானது, செழுமையானது, எளிமையானது, அறிவார்ந்தது, நேர்த்தியானது… எந்தவொரு பொருளோ செயலோ இவற்றில் ஏதோ ஒருவகையில் அமையும்போது அதை எலகன்ஸ் என்று அழைக்கிறோம்.
எந்தத் துறையிலும் மிகச் சிறப்பான வெற்றியடைந்தவர்கள், பல ரசிகர்களைச் சேர்த்துக்கொண்டவர்கள், விமர்சகர்களுடைய பாராட்டுகளைப் பெற்றவர்களைக் கூர்ந்து கவனித்தால், அவர்களுடைய கலையில் இந்த அம்சங்களைப் பார்க்கலாம். அதாவது, எலகன்ஸ் என்பது அதே துறையில் இயங்கும் மற்றவர்களைவிட இவர்களைச் சிறப்பாக்குகிறது, அதற்குதான் ரசிகர்கள் குவிகிறார்கள், வியக்கிறார்கள். ஒருவர் செய்கிற ஒவ்வொன்றிலும் எலகன்ஸ் வெளிப்படும் நிலைக்கு வந்துவிட்டார் என்றால், அவர் அந்தத் துறையில் பெரிய அளவு உயர்வது உறுதி.
தமிழில்எலகன்ட்
ஆங்கிலத்தில் எலகன்ஸுக்குப் பல சொற்கள் இருப்பதுபோல், தமிழிலும் எலகன்ட் என்பதைப் பலவிதங்களில் சொல்லலாம். அவற்றில் முதன்மையானது, ‘நேர்த்தி’.
எடுத்துக்காட்டாக, ஒருவர் நன்கு நடனம் ஆடுகிறார் என்றால் அதை ‘நேர்த்தியான நடனம்’ என்று சொல்லலாம், ‘அவருடைய நடனத்தில் நேர்த்தி வெளிப்பட்டது’ என்று சொல்லலாம்.
எலகன்ட்ஆவதுஎப்படி?
செய்கிற எதிலும் சிறப்பைக் கொண்டுவருவதுதான் எலகன்ஸ். அதற்குக் கூடுதல் உழைப்பும் முனைப்பும் தேவை. தொடக்கத்தில் நாம் செய்கிறவை எலகன்ட்டாக அமையாமல் இருக்கலாம். ஆனால், இது இப்படிதான், இதற்குமேல் இதை மேம்படுத்த இயலாது என்ற மனநிலையுடன் இருந்தால் எலகன்ட் ஆவதற்கான உத்திகளை நாம் கற்றுக்கொள்ள இயலாது. அதற்குப்பதிலாக, அந்தச் செயலை எடுத்து ஆராய்ந்து, நாம் செய்தது என்பதால் அது உயர்வானது என்று எண்ணிவிடாமல் அதில் இருக்கக்கூடிய குறைகள், பிழைகளைக் கண்டறிந்து திருத்தி மேம்படுத்தினால், அடுத்தமுறை அதுபோல் இன்னொரு பணியைச் செய்யும்போது முன்பைவிட நேர்த்தி கூடும்.
பல நேரங்களில், பிறர் சொல்லும் கருத்துகளைக் கூர்ந்து கேட்டால் நேர்த்திக்கான வழி புலப்படும். குறிப்பாக, ‘நல்லா இருக்கு, ஆனா இதையும் செஞ்சா இன்னும் சிறப்பா இருக்கும்’ என்று யாராவது சொன்னால் அதை ஒரு குறையாக நினைக்காமல் நாம் எலகன்ட்டாக அவர் வழிகாட்டுகிறார் என்று நினைத்துக்கொள்ளவேண்டும். அந்தத் திறந்த மனமும் முனைப்பும்தான் நேர்த்தியை நோக்கி நம்மை அழைத்துச்செல்லும்.
எதிலும் நேர்த்தி என்பது மனத்தில் பதிந்துவிட்டால் படிப்படியாக நாம் அந்தப் பாதையில் முன்னேறுவோம், எலகன்ட் வொர்க் என்று எல்லாரும் பாராட்டும்படி வளர்வோம்.