அமேசான் மழைக்காடுகளில் எண்ணெய் எடுக்க நிரந்தர தடை – இயற்கையை மதித்து வாக்களித்த ஈக்வடார் நாட்டு மக்கள்.


செய்தி சுருக்கம்:
உலக சுற்றுச்சூழல் ஆதரவாளர்கள் அனைவருக்கும் ஒரு சந்தோச தினமாக ஆகியுள்ளது. அமேசான் வனப்பகுதியில் அமைந்துள்ள Yasuni National Park பகுதிகள் எண்ணெய் கிணறுகளால் நிறைந்துள்ளது, வணிக ரீதியாக எண்ணெய் எடுக்கும் நிறுவனங்கள் அங்கு செயல்பட தடை விதித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 60 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த நிகழ்வின் மூலம் அவர்கள் அமேசான் மட்டுமன்றி உலகையே பேரபாயத்தில் இருந்து காத்துள்ளனர்.
அமேசான் மழைக்காடுகளின் ஒரு பகுதியாக இருப்பது தான் இந்த Yasuni தேசிய பூங்கா, இங்கு ஆழமாக காலை ஊன்றி நிற்கும் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு காடுகளை அழிக்காமல் தடுக்கும் வகையில் அவற்றிற்கு நிரந்தர தடை விதித்து தீர்ப்பளித்த ஈக்வடார் நாட்டு மக்களின் சிறப்பு உலக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்த Yasuni பகுதி உலகின் மிகப்பெரிய மழைக்காடு ஆகும், பல்வேறு வகையான உயிரினங்களின் வாழ்விடமாக உள்ள இந்த பகுதியின் தட்பவெப்பம் சிறப்பானதாகும்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
கடந்த ஞாயிறு (20-08-2023) அன்று ஈக்வடாரில் நிகழ்ந்த அதிபர் தேர்தலின் போது Yasuni எண்ணெய் கிணறுகள் மூடுவது தொடர்பான வாக்கெடுப்பும் நிகழ்த்தப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியேறுவதற்கு ஆதரவாக 60 சதவிகித வாக்குகள் பதிவாகி உலக மக்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.
“இன்று நாம் ஒரு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளோம்” என்று Yasunidos என்கிற சமூக சுற்றுச்சூழல் தன்னார்வல்கள் அமைப்பு அதன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தது. இந்த அமைப்பின் முயற்சியால் தான் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. இந்த சம்பவத்தின் பெருமையை தெரிவிக்கும் வகையில் “ஈக்வடார் மற்றும் இந்த உலகிற்கு கிடைத்த மாபெரும் சரித்திர வெற்றி இது” என்று மற்றொரு பதிவில் கூறியுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட அரியவகை பறவையினங்கள், நீர் நில வாழ் உயிரினங்கள் மற்றும் ஊர்வன இனத்தை சேர்ந்த பல்வேறு வகையான உயிர்களின் வாழ்விடமாக உள்ள The Yasuni National Park என்பது 1989 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் Cultural Agency மற்றும் UNESCO இவற்றின் கூட்டு முயற்சியால் பல்லுயிர் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதியாகும். அதேபோல இந்த பூங்கா அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதி பல்வேறு பழங்குடி இன மக்கள் வாழ்கின்ற இடமாகவும் உள்ளது. இவர்களில் சில இனக்குழுக்கள் தங்களை உலகில் இருந்து தனிமைப்படுத்தி கொண்டு வெளியுலக தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் இன்னமும்.
வருடந்தோறும் அதிகமான மழைப்பொழிவு பெறுகின்ற காடாக இருப்பதால் இந்த பகுதிகளின் நிலத்தடியில் அதிக அளவிலான எண்ணெய் வளங்கள் உருவாகும் இடமாக உள்ளது, இங்கிருந்து எடுக்கப்படும் பெட்ரோலிய கனிமங்களில் இருந்து தான் அந்நாட்டின் பொருளாதாரம் வளத்துடன் இருக்கிறது என்பதே உண்மை, இந்நிலையில் எண்ணெய் எடுக்க தடை விதிக்க கோரியிருந்த மனுவின் மீதான வாக்கெடுப்பு வெற்றியில் முடிந்ததால் உலகெங்குமுள்ள சமூக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பன்னாட்டு பசுமை இயக்கங்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
துவக்கத்தில் இதற்கு முன்னரே அந்நாட்டின் முன்னாள் அதிபர் Rafael Correa தற்போதுள்ள Yasuni பகுதிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் அப்பகுதிகளில் புதிய பெட்ரோல் கிணறுகளை தோண்ட தடை விதித்து இருந்தார். 2007 ஆம் ஆண்டு இவர் உலக நாடுகளின் மூலம் 3.6 பில்லியன் டாலர் திரட்டி இந்த எண்ணெய் கிணறுகளின் மூலமாக கிடைக்கும் வருவாய்க்கு மாற்றாக வேறு முயற்சிகளை எடுக்க திட்டமிட்டார், ஆனாலும் இவரது முயற்சி எந்த பலனையும் அளிக்காததால் தற்போது வரை அனைத்து அதிபர்களும் ஈக்வடார் நாட்டின் பொருளாதார வலிமையை Yasuni பகுதியின் எண்ணெய் கிணறுகளை கொண்டு மட்டுமே தீர்மானித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் விஞ்ஞானிகள் குழு ஒன்று அமேசான் காடு இந்த பெட்ரோலிய கிணறுகளால் அதன் வளங்களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டனர், ஆயில் நிறுவனங்களால் அழிக்கப்படுகின்ற காட்டின் அளவும், இதற்கான போக்குவரத்திற்கு அழிக்க படும் காட்டின் அளவும் எதிர்கால மழைப்பொழிவை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறியுள்ளனர். இப்போது சரியான முடிவு எடுக்காவிட்டால் அமேசான் மழைக்காடுகளில் ஒன்று நம் கண்முன்னே அழியும், உலகின் மிகப்பெரிய காடான அமேசான் பகுதியில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட உலக சமநிலையில் பாதிப்பை உருவாக்கிவிடும், இதனால் ஏற்படும் பின்விளைவுகளும் மோசமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். அமேசான் பகுதிகள் கார்பனை அதிகளவில் உறிஞ்சும் காடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது, நம் காற்றுமண்டலத்தில் கலந்துள்ள கார்பன் புகை மாசுக்களை அகற்றுவதில் இந்த காடுகள் பெரும் பங்கு வகிக்கிறது.
நடந்து முடிந்த வாக்கெடுப்பின் போது மக்களின் மனதை திசைதிருப்ப எண்ணெய் உற்பத்தி ஆதரவாளர்கள் அனைவரும் இந்த தடை செயல்பாட்டிற்கு வந்தால் அது ஈக்வடார் நாட்டின் பொருளாதரத்தில் மிகப்பெரிய சரிவை உருவாக்கும் என்றும், எண்ணெய் வளத்தை நம்பியே நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியும் என்றும் கூறி பிரச்சாரம் செய்துள்ளனர், அப்படியிருந்தும் அந்நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் இயற்கைக்கு ஆதரவாக வாக்களித்து உலக மக்களின் மனதில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளனர்.
ஈக்வடார் நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர் Fernando Santos செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் “இம்மாத இறுதியில் நிறுத்தப்படவுள்ள எண்ணெய் வணிகமானது இனிமேல் நம் நாட்டிற்கு ஆண்டுதோறும்1.3 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்த உள்ளது, இது நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும்” என்று கூறியுள்ளார்.
இதையெல்லாம் தாண்டி அங்கு வாழ்கின்ற பழங்குடி இன மக்களுக்கும், இயற்கையின் பாதுகாப்பிற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்று இந்த முடிவை உலகின் பல அமைப்பினர் கொண்டாடி வருகின்றனர். அந்நாட்டின் இரண்டு முக்கிய பழங்குடி இனங்களான CONFENIAE மற்றும் CONAIE இன மக்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் “இன்று ஈக்வடார் தன் நாட்டு நலனிற்காக மிக முக்கியமான நடவடிக்கையை உலக மத்தியில் பெரிதாக எடுத்து வைத்துள்ளது. இதன்மூலம் உயிர்களை காப்பது, பல்லுயிர்கள் மீதான அக்கறை மற்றும் பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதிலும் வெற்றி அடைந்துள்ளது.” என்று தெரிவித்து உள்ளனர்.
பின்னணி:
இந்த சிறப்பு வாய்ந்த வாக்கெடுப்பின் முடிவானது உலக அளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது, பிரபலங்கள் பலர் இதற்கு ஆதரவளித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். உலகப்புகழ் டைட்டானிக் படத்தின் கதாநாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ இந்த வாக்குகள் அனைத்தும் நமக்கு தெரிவிப்பது என்னவென்றால் இதுபோன்ற சர்வதேச சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஒழிக்கும் நடவடிக்கை எல்லாம் இதேபோன்று ஜனநாயக முறைப்படி தீர்வு காணப்பட்டால் நன்றாக இருக்கும் என்பதே ஆகும். இது சிறந்த முன்னுதாரணம் என்று கூறியுள்ளார்.
The Waorani People என்ற பழங்குடியின தலைவர் Nemonte Nenquimo அவர்கள் “நாங்கள் தற்போது வரை இங்கு செயல்பாட்டில் இருந்த அனைத்து எண்ணெய் நிறுவனங்களையும் இந்த நிலத்தை விட்டு ஓடும்படி செய்யும் வலிமையை அடைந்துள்ளோம். இந்த மழைக்காடுகள் நிறைந்த மண்ணிற்கு வெற்றியை பெற்று தந்துள்ளோம், இங்கு வாழும் அனைத்து உயிர்களும் பாதிப்படையாமல், அனைத்து நீர் நிலைகளும் இனிமேலும் மாசடையாமல் காப்பாற்றி விட்டோம்” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் அவர் உலக மக்களுக்கு ” இந்த நாள் இந்த வாக்கெடுப்பின் முடிவு நமக்கு தெரிவிப்பது உலகின் வளம் காக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் இனிமேல் வெற்றியடையும் என்பதே ஆகும். இதுவே அதன் முதல் நாள் என நாம் நினைவில் வைத்திருப்போம். மேலும் உலகின் ஊழல் அரசியல்வாதிகளும் பூமியின் எண்ணெய் வளங்களை சுரண்டும் நிறுவனங்களின் தோல்விகளும் இனி தொடரும் என்பதை நினைவு படுத்தும் நாளாகவும் இருக்கும்” என்று கூறி முடித்தார்.