டுன்சோ நிறுவனம் இரண்டு மாத ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்காதது ஏன்?

செய்தி சுருக்கம்:
டுன்சோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பள நிலுவை உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் மாத ஊதியத்தை ஜூலையில் கொடுப்பதாக தெரிவித்த அந்நிறுவனம் தற்போது அதை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இந்தியாவில் 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு ‘கிக் எக்கானமி’ புதிய வடிவமெடுத்தது. இதனால் பல நிறுவனகள் ‘கிக்ஸ்’களை அடிப்படையாக வைத்து இயங்க ஆரமித்தது. முதலில் போக்குவரத்தில் ஓலா, உபர் போன்ற நிறுவங்கள் முளைத்தது அதைத் தொடர்ந்து ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் தங்களது சேவையைத் துவக்கியது. பிறகு ஒரு பொருளை மற்றொரு இடத்திற்கு குறைந்த நேரத்தில் கொண்டு செல்லம் தேவை இருந்ததால் அதிலும் பல நிறுவனங்கள் கால் பதித்தது அதில் ஒன்று தான் டுன்சோ.
பின்னணி:
இந்நிறுவனம் ஹைபர்-லோக்கல் டெலிவெரி எனும் யுக்தியைக் கொண்டு 2014-ம் ஆண்டு துவங்கியது. டுன்சோ, அதென்ன புதிய பெயராக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? ஸ்விக்கிக்கு ஆரஞ்சு கலர், சோமாட்டோவிற்கு சிகப்பு கலர் போல, டுன்சோ நிறுவன ஊழியர்கள் பச்சை நிற டி-ஷர்ட்டை போட்டுக்கொண்டு டூ வீலரில் செல்வதை நீங்கள் கவனித்திருக்கலாம், அதுதான் டுன்சோ.
ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதே ஹைபர்-லோக்கல் டெலிவெரி ஆகும். பெருகி வரும் பரபரப்பான சூழலில் இது போன்ற சேவைகள் பெருநகர மக்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. அதனால், இதுபோன்ற நிறுவனங்களுக்கு பெருநகரங்களில் கிடைக்கும் வரவேற்பின் அளவிற்கு டயர் 2 நகரங்களில் கிடைப்பதில்லை.
இதனால் வர்த்தக ரீதியாக இந்நிறுவனங்களின் செயல்பாடுகள் தேக்கமடைகின்றது. சரியான முதலீடுகள் இல்லாமல் திண்டாடுவதால், ஊழியர்களுக்கு சரிவர ஊதியம் அளிப்பதில் அந்நிறுவனதிற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டுன்சோ நிறுவனம் தனது ஊழியர்களை கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் பெருமளவு பணிநீக்கம் செய்தது. மேலும் ஜூன் மாத சம்பளத்தை ஜூலை மாதத்தில் தருவதாக கூறிய நிறுவனம் தற்போது அதை செப்டம்பர் ஆக மாற்றி அறிவித்துள்ளது. மேலும் பல ஊழியர்களை பணிநீக்கும் முடிவிலும் இறங்கியுள்ளது.
ஊழியர்கள் தேவைக்கு மிகுதியாக இருப்பதனாலும், நிறுவனத்தின் மூலதனத்தைக் காப்பாற்றவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று டுன்சோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வகை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் இந்நிறுவன முதலீட்டாளர்கள் இந்நிறுவனதிற்கு எதிராக வழக்கு தொடரும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.
டுன்சோ – வரலாறு
ஹைபர்-லோக்கல் டெலிவெரியில் முன்னோடியாகவே பிஸினசை ஆரமித்தது டுன்சோ. 2014 ஆம் ஆண்டு, இன்றிலிருந்து சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரில், பயனாளர்களை ஒரு வாட்ஸ் ஆப் குழுவாக ஒன்றிணைத்து, தேவையான பொருட்களை பெங்களூருக்குள் பரிமாறிக்கொள்ள சிறு கட்டனத்துடன் இதன் சேவை துவங்கியது. இதையே ‘ரெவன்யூ மாடல்’ ஆக வைத்து பின்பு முதலீட்டாளர்களை ஈர்த்து இந்நிறுவனம்.
2017-ம் ஆண்டு இதன் வளர்ச்சியைக் கண்டு கூகுள் நிறுவனம், டுன்சோவில் முதலீடு செய்தது. டுன்சோ தான் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதல் முறையாக கூகுள் முதலீட்டைப் பெற்ற நிறுவனமாகும். பொருட்களை மட்டும் பரிமாறாமல் ஸ்விக்கி, சோமாட்டோ போன்று உணவு விநியோகத்திலும் இறங்கியது இந்நிறுவனம். எனினும், ஏற்கனவே நன்று வளர்ந்து விட்ட ஸ்விக்கி, சோமாட்டோவிற்கு எதிராக டுன்சோவால் நிலைத்து நிற்க முடியவில்லை.
அதே நேரம் இந்த ஹைபர்-லோக்கல் டெலிவெரியில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நுழைந்தது. செப்ட்டோ, பலிங்க் ஈட் போன்ற நிறுவனங்கள் டுன்சோவிற்கு கடும் போட்டியாக மாறியது. ஸ்விக்கி நிறுவனம் பொருட்களை பரிமாறிக்கொள்ளும் சேவையாக ஸ்விக்கி ஜீனி மற்றும் இன்ஸ்டா மார்ட் என்று ஒரு தேர்வையும் அதன் செயலியில் சேர்த்தது. சோமாட்டோ நிறுவனம் ‘பலிங்க் இட்’ நிறுவனத்தை தனதாக்கிக் கொண்டு போட்டியை மேலும் கடுமையாக்கியது. இதனால் டுன்சோ நிறுவனம் சரியான இலக்குகளை அடைய முடியாமல் தேங்கியது. எனினும், 2022-ம் ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் 1500 கோடியை இதில் முதலீடு செய்தது.
இருப்பினும் 2022 முதல், முதலீடு தளத்தில் ‘ஃபண்டிங் வின்டர்’ நிலவுவதால் தேவையான முதலீடுகள் கிடைக்காமல் பல ஸ்டார்ட் ஆப் நிறுவனகளின் வளர்ச்சி தேக்கமடைந்துள்ளது. அதில் டுன்சோ நிறுவனமும் விதிவிலக்கல்ல.