Alzheimer’s Disease in Tamil

அன்றாட வாழ்க்கையில் நினைவாற்றல் மிக முதன்மையான பங்கை ஆற்றுகிறது. நம் வீடு இதுதான் என்று நினைவு வைத்துக்கொண்டு வீடு திரும்புவதில் தொடங்கி எந்தப் பொருள் எங்கு இருக்கிறது என்று தெரிந்துகொண்டு நம் பணிகளைச் செய்வது, பிறருடன் பேசும்போது முந்தைய உரையாடல்களை நினைவில் வைத்திருந்து அதற்கேற்பப் பதில் சொல்வது என்று இதன் பயன்கள் ஏராளம்.
ஒருவேளை, இந்த இணைப்புகளில் ஏதேனும் பிரச்சனை வந்தால்? அதுதான் அல்சைமர்’ஸ் எனப்படும் நோயின் அடிப்படை. இந்தக் கட்டுரையில் இந்நோயைப்பற்றித் தெரிந்துகொள்வோம்.
அல்சைமர்‘ஸ்நோய்என்றால்என்ன?
மனிதர்களுடைய செயல்பாடுகள் அனைத்தையும் மூளைதான் கட்டுப்படுத்துகிறது என்பது நமக்கு நன்றாகத் தெரியும். இதற்கு மூளை உடலின் பல பகுதிகளுடன் இணைந்திருக்கவேண்டும். அப்போதுதான் இதைச் செய்யவேண்டும் என்று மூளை இடுகிற கட்டளை வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லும், அந்தப் பகுதிகள் சொல்லும் பதிலும் மூளைக்கு வரும், அங்கு சரியான தீர்மானத்தை எடுக்க இயலும்.
ஆனால், சிலருக்கு இந்த மூளை, உடற்பகுதிகள் இணைப்பு சரியாக இருப்பதில்லை, அந்த இணைப்பை உருவாக்கும் வேதிப்பொருட்களில் பிரச்சனைகள் உள்ளன. அதனால், அவர்களுடைய மூளைக்கும் உடற்பகுதிகளுக்குமான ஒருங்கிணைப்பு பாதிக்கப்படுகிறது, இது அல்சைமர்’ஸ் நோயாக வெளிப்படுகிறது.
அல்சைமர்‘ஸ்நோய்யாருக்குவரலாம்?
இந்த நோய் படிப்படியாகத் தீவிரமடையும் நோய் ஆகும். அதாவது, சிறிய அளவில் தொடங்கி அங்கிருந்து சிறிதுசிறிதாகப் பெரிதாகிறது. இதைத் தொடக்கத்தில் கண்டறிவது சிரமம்.
குறிப்பாக, இது முதியவர்களைக் கூடுதலாகப் பாதிக்கிறது. வயதினால் வரும் நினைவாற்றல் இழப்புதான் என்று நினைத்துப் பலரும் இதற்குச் சிகிச்சை பெறாமல் இருப்பதால் இது தீவிரமடைந்துவிடுகிறது.
அல்சைமர்‘ஸ்நோய்க்குயாரிடம்சிகிச்சைபெறவேண்டும்?
எந்த வயதினராக இருந்தாலும் அல்சைமர்’ஸ் நோயின் அறிகுறிகள் ஒருவரிடம் காணப்பட்டால் அவர் நரம்பியல் வல்லுனர் ஒருவரைச் சந்தித்துப் பேசவேண்டும். அந்த மருத்துவர் இவரிடம் இருக்கக்கூடிய அறிகுறிகளைப்பற்றிப் பேசிப் புரிந்துகொள்வார், தேவைப்பட்டால் சில பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார். குறிப்பாக, மூளையைப் படம் பிடிக்கக்கூடிய ஸ்கானின்மூலம் இந்தப் பிரச்சனையை இன்னும் நுட்பமாகக் கண்டறியலாம்.
அல்சைமர்’ஸ் நோய்க்குச் சிகிச்சைகள் எதுவும் இல்லை. ஆனால், அதன் அறிகுறிகளை மருந்துகளின்மூலம் கட்டுப்படுத்தலாம். இதைத் தகுதிபெற்ற மருத்துவர்தான் செய்யவேண்டும்.
அல்சைமர்‘ஸ்நோய்எதனால்வருகிறது?
மனித மூளை இப்படிதான் இயங்குகிறது என்று நாம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. அதனால், அல்சைமர்’ஸ் நோய்க்கான காரணங்களையும் துல்லியமாக வரையறுப்பது சிரமம். புகைபிடிப்பதை நிறுத்துவது, நல்ல உடற்பயிற்சி, மற்ற நோய்களைக் கட்டுக்குள் வைப்பது போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களின்மூலம் இதை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள்.
அல்சைமர்’ஸ் நோய் வந்தவர்களுக்குப் பிறருடைய அன்பும் ஆதரவும் மிகவும் தேவைப்படும். அவர்களுடைய அன்றாடச் செயல்பாடுகளுக்கு உதவுவதுடன், இப்படி ஒரு பிரச்சனை தங்களுக்கு வந்துவிட்டதை எண்ணி அவர்கள் வருந்துவதைப் புரிந்துகொண்டு, நாங்கள் உங்களுக்கு இருக்கிறோம் என்கிற உறுதியைக் கொடுக்கவேண்டும். அவர்களை ஒரு சுமையாக நினைக்காமல் அன்போடு அரவணைத்து வேண்டிய உதவிகளை, மருத்துவத்தைக் கொடுத்துப் பார்த்துக்கொள்ளவேண்டும்.
உலகெங்கும் அல்சைமர்’ஸ் போன்ற தீவிர நோய்களுக்கு இன்னும் உறுதியான, நிலையான மருத்துவத்தைக் கண்டறியும் ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இதன்மூலம் அல்சைமர்’ஸ் நோய்க்கு ஒரு நல்ல சிகிச்சை கிடைக்கும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள பலரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள் என்று நம்புவோம்.