‘AI டெக்னாலஜியால் தேர்தல் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பு ஆட்டம் காணப்போகிறது!’ – பில் கேட்ஸ் எச்சரிக்கை!!

செய்தி சுருக்கம்:
இப்பொழுது உள்ள ஏ ஐ டெக்னாலஜியால் உருவாக்கப்படும் டீப் பேக் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களால் இதுவரை கட்டமைக்கப்பட்டு செயல்பட்டு வந்த தேர்தல் மற்றும் ஜனநாயக அமைப்பு சீர்குலைய வாய்ப்பிருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது வலைப்பதிவில் கூறியுள்ளார்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
சக்தி வாய்ந்த செயற்கை நுண்ணறிவால் தவறான தகவல்களை மக்களிடையே பரவலாக்க வாய்ப்பு இருப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டு பெரிய அளவில் உருவாக்கப்படும் AI டீப்ஃபேக் வீடியோக்கள் தேர்தல் முடிவுகளைக்கூட மாற்றக்கூடிய வல்லமை படைத்தவை. நிச்சயமாக முறையான வெற்றியாளரைப் பற்றி சந்தேகம் கொள்ளச்செய்ய இந்த தொழில்நுட்பத்திற்கு சக்தி இருக்கிறது என்கிறார் பில் கேட்ஸ்.
AI டீப்ஃபேக் வீடியோ என்றால் என்ன?
சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் இருக்கும் தமன்னா அட்டகாசமாக ஆட்டம் போட்டிருந்த வீடியோவில் அப்படியே தமன்னாவின் முகத்திற்கு பதிலாக சிம்ரன் என்ற நடிகையின் முகத்தைப் பொருத்தி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதுதான் டீப் ஃபேக் வீடியோ என்பது.
உற்சாகமான ஆட்டத்தின்போது வெளிப்படும் நுணுக்கமான முக பாவனைகள் கூட பிசிறில்லாமல் அந்த போலி வீடியோவில் இடம்பெற்றிருந்தது. அப்படி இருக்கையில் பொறுமையாக முகத்தில் எந்த பெரிய உணர்ச்சிகளும் இன்றி ஒருவர் பேசும் வீடியோவி அப்படியே வேறொருவர் பேசுவது போல மாற்றுவது இந்த தொழில் நுட்பத்திற்கு ஒரு பெரிய வேலையே இல்லை.
சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் ஒரு AI உருவாக்கிய செய்தி வாசிப்பாளரைப் பற்றிப் பார்த்தோம். உண்மையான பெண்ணைப்போன்ற முகபாவனைகள், கண் சிமிட்டல்களுடன் அந்த AI பிம்பம் செய்திகளை வாசித்தது. அங்கே இங்கே என்று கேள்விப்பட்டு இப்பொழுது நமது நாட்டிலேயே AI தொழில்நுட்பம் வந்துவிட்டது.
AI பற்றி பில்கேட்ஸ் இப்பொழுது கவலைகொள்ளக் காரணம் என்ன?
சென்ற மார்ச் மாதத்தில் கூட பில் கேட்ஸ் இந்த AI தொழில் நுட்பத்தைப் பற்றி சிலாகித்துப் பேசியிருந்தார். எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் பல ஆக்கபூர்வமான காரியங்களைச் செய்யும் என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தார். ஆனால் இப்பொழுது அவரது அந்தப் பார்வை முற்றிலுமாக மாறியிருக்கிறது.
ஏனெனில் 2023 ஏப்ரலில் புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸை ஜனாதிபதி பதவிக்கு முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆதரித்து பேசியதாக ஒரு வீடியோ சமூக வலை தளங்களில் வைரல் ஆனது. உண்மையில் அது டீப் ஃபேக் வீடியோ ஆகும். ஹிலாரி கிளிண்டன் அவ்வாறு எந்த வீடியோவிலும் பேசியிருக்கவில்லை.
அந்த வீடியோ எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதற்கான முழுமையான தரவுகள் இல்லை. இருப்பினும், இது ஒரு முக்கியமான அரசியல் போலி வீடியோ என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
2022 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு மூன்று மடங்கு டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று டீப்மீடியா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் உள்ள சமூக ஊடக வலைத்தளங்களில் 500,000 வீடியோ மற்றும் வாய்ஸ் டீப்ஃபேக்குகள் பகிரப்படும் என டீப்மீடியா தெரிவிக்கிறது.
இந்த AI டீப்ஃபேக் வீடியோக்களால் என்ன நடக்கும்?
பில்கேட்ஸ் இரண்டு விதமான விளைவுகள் இந்த டீப் ஃபேக் வீடியோக்களால் நடக்கும் என்று நம்புகிறார். ஒன்று, மக்கள் கண்ணால் காணும் எல்லாவற்றையும் நம்பும் பழக்கத்தைக் கைவிடுவார்கள். உண்மை என்ன என்பதை ஆராய முற்படுவார்கள். மின்னஞ்சல் வந்த புதிதில் நைஜீரிய இளவரசர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலர் அனுப்பிய போலி மெயில்களில் பலர் தங்கள் பணத்தைத் தொலைத்தனர். இன்று அவ்வாறான இமெயில் மோசடியில் யாரும் பெரிதாக ஏமாறுவதில்லை.
இரண்டாவது, இந்த டீப்ஃபேக் வீடியோக்களை அடையாளம் காணவும் AI தொழில் நுட்பம் நமக்கு உதவக்கூடும் என்பதுதான்.
உண்மையில் தொழில்நுட்பம் என்பது இருபுறமும் கூர்மையான கத்தியைப் போன்றதுதான். நல்லதற்கும் தீயதிற்கும் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உறுதியாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பாக மார்ஃபிங் என்ற தொழில்நுட்பம் வெளிவந்தபோது புற்றீசல் போல போலி வீடியோக்கள் வெளிவந்தன.
கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் கொண்ட சமுதாயத்திற்கு இந்தகைய தொழில்நுட்ப மேம்பாடுகள், நிறைந்த பலனைக் கொடுக்கும். மாறாக கஞ்சா போதையிலும் மது மயக்கத்திலும் மூழ்கி இருக்கும் சமுதாயம் எந்த தொழில்நுட்பம் வந்தாலும் அதை தீய அழிவு வழியிலேயே செலுத்தும் என்பதை மறுக்க முடியாது.
ஒருவன் கையில் இருக்கும் கத்தி ஆயுதமா இல்லை அறுவை சிகிச்சை கருவியா என்பதை அந்த ஆயுதம் முடிவு செய்வதில்லை. மாறாக அந்த மனிதனே முடிவு செய்கிறான்.